Showing posts with label அன்பின் விதிகள். Show all posts
Showing posts with label அன்பின் விதிகள். Show all posts

23 August 2020

தேவகுமாரன் இயேசுகிறிஸ்து ஏன் மரித்தார் - நற்செய்தி

ஆதியில்  தேவன் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவையும் உண்டாக்கினார்.

தேவன் தாமே தம்முடைய சாயலில் மனிதனையும் படைத்தார். அவர் படைத்த அந்த  மனிதனோடு அனுதினமும் உறவாடிவந்தார். ஒருநாள் அந்த மனிதன் தேவனின் வார்த்தைக்கு கீழ்படியாமல் போனதினிமித்தம் தேவனின் சமுகமும், ஜீவ விருட்சம் இருந்த  ஏதேன் தோட்டத்திலிருந்து அவன் துரத்தப்பட்டான். ஆதியாகமம் 1-3

அந்த முதல் மனிதனின் பெயர் ஆதாம், அந்த ஆதாம் என்ற ஒரு மனிதனின் மீறுதலினாலே பாவமும், பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்து, ஆதாமின் வழியில் வந்த அனைவரையும் அதாவது ஆதாம் முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய் பாவம் செய்யாதவர்களையும் ஆண்டுக்கொண்டது. ரோமர் 5

ஐயோ, பாவமுள்ள ஜாதியும், அக்கிரமத்தால் பாரஞ்சுமந்த ஜனமும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடு உண்டாக்குகிற புத்திரருமாயிருக்கிறார்கள்; கர்த்தரை விட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனார்கள்.
மனிதனின் உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமில்லை; அது காயமும் வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது. ஏசாயா 1

நமது மாம்ச இச்சையின்டியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். யூதர்களும், கிரேக்கர்களும், உலகத்தார் யாவரும் பாவத்திற்க்குட்பட்டவர்களாய் வாழ்ந்துவந்தார்கள். அந்தபடியே: நீதிமான் ஒருவனாகிலுமில்லை; உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத்தேடுகிறவன் இல்ல; எல்லோரும் வழிதப்பி, ஏகமாய்க்கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனாகிலும் இல்லை!  ரோமர் 3

தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை, நாமோ இருளாயிருக்கிறோம்.
தேவன் பரிசுத்தராயிருக்கிறார், அவருடைய பிள்ளைகளான நாமோ பாவஞ்செய்து,  பரிசுத்தமிழந்து, தேவமகிமையற்றவர்களாகி தேவக்கோபாக்கினைக்கு கீழாக வாழ்ந்து வந்தோம்.
 

ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிற தேவன் தம்முடைய ஒருபேறான குமாரனை உலகத்தில் அனுப்பி, அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

தேவன் அன்பாயிருக்கிறார் என்று நாம் அறிந்ததே. அன்பாயிருக்கிற தேவன், பாவத்திலும் மரணத்திலும் அகப்பட்டு விடுபட வழிதெரியாமல் தவித்துக்கொண்டு, கதறிக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கு இரக்கம்பாராட்டாமலிருப்பாரா? ஆம் அளவில்லா இரக்கம்பாராட்டினார்....!!! எப்படி?! தம்முடைய ஒரே பேறான  குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.

பாவிகளாகிய நாம் குமாரனாகிய கிறிஸ்துவுக்குள்  தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார். பாவங்களினாலேயும், மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த நம்மை அக்கிரமங்களெல்லாவற்றையும் நமக்கு  மன்னித்து கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.

அந்த குமாரனனவர் எப்படிப்பட்டவர்

  • மாம்சத்திலே வெளிப்பட்ட தேவன்
  • இவர் தேவனின் மகிமையின் பிரகாசமும், தேவனின் தன்மையின் சொருபமுமானவர்.
  • இவர் அதரிச தேவனின் தற்சுருபமானவர்.
  • ஆதியிலிருந்தே தேவனோடிருந்தவர், தேவனாயிருந்தவர்.
  • தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் இந்த குமாரனுக்குள் வாசமாயிருக்கிறது.


இந்த குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு -

  • நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் ;
  • குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன், நித்தியஜீவனை அடைவதும், குமாரன்  அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
  • ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.
  • இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
  • தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச்சாட்சியாம்.
  • குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும்.  
  • ஜீவனும், அழியாமையும், தேவனிடத்தில் சமாதானமுமாம்.


நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார். தேவன்  ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.

எபிரெயர் 10:4 அல்லாமலும், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே, அப்படி வருஷந்தோரும் இடைவிடாமல் செய்துவரும் பலியினால் யாருடைய மனச்சாட்சியும் பூரணப்படவில்லை, அவர்களது மனச்சாட்சியே அவர்களுக்கு  பாவங்களுண்டு என்ற குற்றயுணர்வு  அவர்களுக்கு இருந்தது. Hebrews 10:1-4 அந்தக் கூடாரம் இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது; அதற்கேற்றபடியே செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தக்கூடாதவைகளாம். எபிரெயர் 9:9  

மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக்  தேவன் கட்டளையிட்டார்;  ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.லேவியராகமம் 17:11

இயேசுகிறிஸ்துவானவரே நம்முடைய பாவத்தை சுமந்தார் என்று விசுவாசியாவிட்டால் நாம் நம்முடைய பாவங்களிலேயே சாவோம், நிவாரணி ஒன்றுமே கிடையாது. John 8:24, I Corinthians 15:17  அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழிங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாம்மேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை. Acts 4:12

தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து நமது பாவத்திற்க்காக பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு முன்றாம் நாள் உயிர்ந்தெழுந்தார், அநேகருக்கு பிரட்சேசமாக தன்னை உயிரோடுயிருக்கிறவராகவும்  காணப்பட்டார்  - இதுவே சுவிஷேசத்தின் விசுவாசத்தின் வார்த்தை!  1  Corinthians 15:1-11

நிச்சயிக்கப்பட்ட பெண்ணும், வெளிதேசத்திலிருந்து வரும் வருங்கால மாப்பிளையும்...

"உன்னவர்தான்  தூரத்தில் வருகிறார் ஆம் அவர் உன்னுடையவர் தான்... என் இரண்டு கண்களினாலே பார்த்தேன் நீ வேணா வந்து பாரேன்"  என்றாள் என்  பக்கத்துவீட்டு  தோழி.

நானும் இதயம் படபடக்க, என்ன செய்வதென்றே தெரியாமல் பக்கத்தில் யார் நிற்கின்றார்கள் என்று கூட  கவனிக்காமலும் ஓட்டமாய் ஒடினேன். .... ஆம் என்னவர்தான் ஆம் அவரே தான் அதே நடை, அதே சாந்தம், அதே கண்கள், அதே முகம் .... அதோ வந்துக்கொண்டிருக்கிறார்... ஐந்து நிமிடத்தில் இதோ வந்துவிடுவார். ஆ ஐயோ சந்தோஷம். .... நான் என்ன செய்வேன் தெரியலையே ....

எத்தனை வேதனை, எவ்வளவு துக்கத்தை சகித்திருப்பேன். சீக்கிரமாக வந்துவிடுவேன்,  உன்னை எல்லோருக்கும்  முன்பாக திருமணம் செய்வேன் என்று சொல்லிப்போனவர் இன்றும்தான் வருகிறார்.

பக்கத்துவீட்டு தோழிகள் கூட சொன்னதுண்டு, இன்னுமா உன் ஆளுக்காக காத்திருக்கிறாய் நிச்சயம் பண்ணி மூன்று வருஷம் ஆகிவிட்டது, வந்துவிடுவேன் என்று போனவர் இன்னும் வரவில்லை. நான் சொன்னேன் "எத்தனை  வருஷம் ஆனாலும் சரி, நான் அவருக்காகதான், அவர் என்னுடையவர் தான் "

இதோ அருகில் வந்துவிட்டார், நான் அவரை நோக்கி ஓடினேன், என் கண்களில் கண்ணீர் கொப்பளித்து, முகத்தை நனைத்தது. ஓடோடிபோய் அவரை பிடித்துக்கொண்டேன், அழுகை.... அழுகை...  கண்ணீர் கண்ணீர்  முகத்தை நினைத்தது.

எங்களை சுற்றி யார் நிற்கிறார்கள் நாங்கள் அறியோம்!!!

இயேசுநாதரை இப்பூமிக்கு அனுப்பின கடவுளின் நோக்கம் என்ன?

 கிறிஸ்துவம் என்றால் என்ன? இயேசு கிறிஸ்து பூமிக்கு பிதாவால் அனுப்பப்பட்டார், பிதாவின் சித்தத்தை நிறைவேற்றி முடித்தார்.

தேவனின் நோக்கம் - ஒரே மந்தையும், மனிதர்களின் ஏகசிந்தையும், அவர்களில் தேவமகிமையும் உருவாக்கவே.
அவரை தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கடவுள் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.
...
அவர்கள் நிலையோ மிகவும் பரிதாபமாகயிருந்தது இப்படி.....
""கடவுள் இல்லை என்று மதிகெட்டவர்கள் தங்கள் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறார்கள். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள், நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.

எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள், நன்மைசெய்கிறவன்இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள், அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது,

அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது,
அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது,
சமாதான வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்,
அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை!
எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி நின்றார்கள்!""
கடவுள் கதறினார், ஐயோ! ஐயோ! நான் இவர்களை செம்மையானவர்களாக படைத்தேனே! இவர்களோ அநேக உபாயதந்திரங்களை தேடிக்கொண்டார்களே!

யோசித்தார், யோசித்தார். என்ன செய்ய இப்படி கெட்டுப்போன மனிதர்களை?!அப்போழுது, அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டியைப்போலிருந்த, நம்ம இயேசப்பா தான், கடவுளுக்கு ஞாபகமாக வந்தாங்க!

"பிதாவே! பிதாவே! உம் சித்தம் செய்யவே, நான் உம்மோடு இருக்கிறேன்! நீர் எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ?, இப்போதிருக்கிற, நீர் எனக்குத் தந்த மகிமையைக்கூட இழந்து, என்னையே வெறுமையாக்கி அடிமை ரூபமெடுக்க இப்போதே தயார்" என்றார்.
கடவுள் சொன்னார் இப்படி " இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன், என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார்."

பாவிகளை காப்பாற்ற கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமானது.
நாம் இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
நம்ம இயேசப்பா பூமியிலயிருக்கும்போது, பிதாவிடம் நமக்காக இப்படி ஜெபித்தாங்க!

"ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்."

இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையிலே காத்திருக்கிறோம்.
தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.
இந்தத் தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன், மரணபரியந்தம் நம்மை நடத்துவார். அப்படியே ஆகட்டும்!

11 July 2020

கடவுள் /இறைவன் / தெய்வம் / பராபரன் /சுவாமி யார்?

மனிதர்களுக்கு அனுதினமும் பிரச்சனைகள்!!!  இவ்வுலகத்தில்  மனிதர்கள் அனுபவிக்கும்  வேதனைகளையும், துன்பங்களையும், அழுகுரலையும், மரணஓலத்தையும்,  நம்முடைய கஷ்டங்களை தாங்குபவர் யார் என்ற கதறல் சத்தத்தையும், நமக்கு ஆறுதலான வார்த்தையை தருபவர் யார் என்று ஏங்கும் இருதயத்தையும், எனக்கு நிம்மதியே வராதா என்று தவிக்கும் ஏக்கத்தையும், ஏழைகளின் பசியையையும், ஒடுக்கத்தையும், எப்போது விடியும் என்று காத்திருக்கும் கண்களையும், வயிற்றுக்காக அனுதினமும் பாரசுமப்பதையும்  இரக்கமுள்ள இறைவன்  கண்ணோக்கி பார்க்கவே பார்க்கிறார், காதுகளால் கேட்கிறார்.

இறைவனா? நம்மை கவனிக்கிறாரா? யார் அது? அவர் எப்படியிருப்பார்?  Really who God is? என்று நீங்கள் கேட்கலாம்.

இறைவன்  என்பவர் யார் , அந்த கடவுள் என்பவர் எப்படிப்பட்டவர்?! மனிதர்கள் அந்த  கடவுளை  அழைக்கும் பெயர்கள் பல -  இறைவன், பரமாத்மா, பரம்பொருள், ஒளி, ஆண்டவர், தேவன், தெய்வம், ஆண்டவர், சாமி....

கடவுள் எப்படிப்பட்டவர், அவர் யாரென்றும், அவர் எங்கிருக்கிறார் என்றும் பார்க்கலாம்.

கடவுளை பலப்பெயர்களில் அழைத்தாலும் , பல உருவங்களில்  வழிப்பட்டாலும்  அவர்  ஒருவராய் இருக்கிறார்.
அவர் இருக்கிறவராக இருக்கிறார், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்;
அவர் ஒளியாயிருக்கிறார், ஆவியாயிருக்கிறார்,அன்பாயிருக்கிறார், அதரிசமானவருமாயிருக்கிறார், ஆதியும் அந்தமும் இல்லாதவர்.  
வானங்களும் வானாதிவானங்களும் அவரைக் கொள்ளக்கூடாதிருக்க, அவரே வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர்!
அந்த அன்பான கடவுளே சகலத்தையும் படைத்தவர் - வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதிலுள்ளவைகளையும், சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவர், அவரே  தூதர்களையும், சகலஜீவராசிகளையும், மனிதர்களையும் படைத்தவர்.
அந்த ஒரே காணக்கூடாத தேவன் தம்முடைய ஒரே குமாரன் மூலமாக தன்னை வெளிப்படுத்தினார், அவரின் குமாரனான இயேசுகிறிஸ்துவே ஆதிமுதலிலிருந்து தேவனோடுயிருந்தவர், தேவனாயிருந்தவர்.

-  மனிதர்களை பாவத்திலிருந்து விடுவிக்க இறைவன் தம்முடைய குமாரனை மனித  உருவெடுத்து மனிதமாம்சத்தில் வெளிப்படப்பண்ணினார் - அவரே இயேசுகிறிஸ்து!

- அண்ட சராசரங்களும் கொள்ளக்கூடாதவரும், வானாதிவானங்களையும், பூமியையையும் நிரப்புகிறவர் மனிதர்கள் மேல்வைத்த அளவற்ற அன்பினால், தம்முடைய குமாரனை மனுவுருவெடுக்க வைத்தார்.

- அவருடைய குமாரனான இயேசுகிறிஸ்து தம் மகிமையை இழந்து மனிதர்களுக்காக மனிதனானார், நம்முடைய துக்கத்தையும், வேதனையையையும் பார்த்து அவர்களுக்கு நிரந்தர சந்தோஷத்தையும், நித்திய வாழ்வையும் கொடுக்க பரலோகத்தை விட்டு,  மனிதர்களுக்கும், இறைதூதர்களுக்கும் காணப்படும்படி  இறைவனோடிருந்தவர் ,  இறைவனிடத்திலிருந்து இறங்கிவந்தார் - அவரே இயேசுகிறிஸ்து.

இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதலையும்,
சிறுமையானவர்களுக்கும்  ஆறுதலையையும், ,
பாவிகளை பாவத்திலிருந்து விடுதலையளிக்கவும்,
எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைக்கவும்,
மரணத்திலிருந்து  ஜெயத்தை கொடுக்கவும்,  
மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்படவும்,
 சிறுமைப்பட்ட ஜனத்தை ரட்சிக்கவும்,
 சிறுமைப்பட்டவனுக்குக் அவரே அடைக்கலமாகவும்,
நெருக்கப்படுகிறவர்களுக்கு அவரே தஞ்சமாகவும்,
 ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்யவும்,
 சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யவும்,
மறைவாயிருந்த மகிமை வெளிப்பட்டது ....
காணக்கூடாதவர் தம் குமாரன் மூலமாக காணப்பட்டார் .....

இந்த இயேசுகிறிஸ்துவினிடத்தில்  விசுவாசம் வைத்து, அவரிடம் உங்களுடைய பாவங்களை சொல்லி விட்டுவிட்டு, அவரோடு அனுதினமும் பேசி, நெருக்கமான உறவு வைத்திருந்தால் அவர் உங்களுக்கு சமாதானமும், சந்தோஷமும் கொடுப்பார். அவரே நம் இருதயத்தை பிராகாசிப்பவர், செத்த நம் வாழ்க்கைக்கு ஜீவனைத்தருகிறவர்,  வேதனையான, துக்கம்நிறைந்த நம் மனதுக்கு அவரே ஆறுதல் தருகிறவர்.

இறைவன் நம்மை படைத்ததின் நோக்கம் நாம் இந்த உலக வாழ்வை முடித்து, மண்ணோடு மண்ணாக மாறவேண்டுமென்பதற்க்காக அல்ல. நம்முடைய உலக வாழ்விற்க்கு பிறகு நமக்கு இன்னோரு அழியாத, இறைவனால் கட்டப்பட்ட புது உலகத்தையும், வானத்தையும்  வைத்திருக்கிறார் , அவரை விசுவாசித்து அவரோடு அனுதினமும் வாழ்பவர்கள்,  இறைவனால் உண்டுபண்ணின அந்த அழியாத நகரத்தில் நுழையமுடியும், அந்த புது  நகரத்தில் எப்போதும் தேவனோடு வாழ்வார்கள், சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும்.

அங்கே இறைவன் தாமே நம்முடைய கண்ணீர் யாவையும் துடைப்பார், இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை;அங்கே  நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.

இந்த இறைவன் உங்களுக்கு தேவையா?  அவருடைய குமாரனை நோக்கி - இயேசுகிறிஸ்துவே நீர்  என் வாழ்க்கைக்கு தேவை என்று சொல்வோமா?

Popular Posts